Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


2026 ஹஜ் யாத்திரைக்கான பயணிகளை இலங்கை தூதர் அமீர் அஜ்வத் வரவேற்றார்


இந்த ஆண்டுக்கான இலங்கையின் ஹஜ் நடவடிக்கைகளை ஆரம்பித்து வைக்கும் முகமாக, 325 இலங்கை ஹஜ் பயணிகளைக் கொண்ட முதல் குழுவினர் இன்று (சனிக்கிழமை, 2 மே 2026) சவுதி அரேபியா சென்றடைந்தனர்.

சவுதி அரேபியாவிற்கான இலங்கைத் தூதுவர் அமீர் அஜ்வாத், திருமதி அஸ்மியா அமீர் அஜ்வாத் மற்றும் பதில் துணைத் தூதுவர் மஃபுசா லாபிர் ஆகியோருடன் இணைந்து, ஜித்தாவில் உள்ள மன்னர் அப்துல்அஸிஸ் சர்வதேச விமான நிலையத்தில் இலங்கை யாத்ரீகர்களை அன்புடன் வரவேற்றார். ஜித்தாவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகத்தின் அதிகாரிகள், 2026 ஆம் ஆண்டிற்கான இலங்கையின் ஹஜ் சேவை வழங்குநராக நியமிக்கப்பட்டுள்ள 'ரெஹ்லத் வா மனாபே' (Rehlat Wa Manafe) அமைப்பின் பிரதிநிதிகள் மற்றும் 'நுசுக்' (Nusuk) ஹஜ் செயற்பாடுகளின் பிரதிநிதிகள் ஆகியோரும் யாத்ரீகர்களை வரவேற்பதற்கும் அவர்களது வருகைக்கான ஏற்பாடுகளை எளிதாக்குவதற்கும் அங்கு பிரசன்னமாகியிருந்தனர்.



அங்கு திரண்டிருந்தோர் மத்தியில் உரையாற்றிய தூதுவர் அமீர் அஜ்வாத், யாத்ரீகர்களுக்கு தனது நல்வாழ்த்துக்களைத் தெரிவித்ததோடு, ஹஜ் பயணத்தின் ஆழ்ந்த ஆன்மீக முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். இலங்கை உட்பட உலகெங்கிலுமிருந்து சவுதி அரேபியாவுக்கு வருகை தரும் மில்லியன் கணக்கான ஹஜ் பயணிகளின் நல்வாழ்வு மற்றும் சௌகரியத்தை உறுதி செய்வதற்காக செய்யப்பட்டுள்ள சிறப்பான ஏற்பாடுகள் மற்றும் அதியுயர் வசதிகளுக்காக, இரு புனிதப் பள்ளிகளின் காவலரான மன்னர் சல்மான் பின் அப்துல்அஸிஸ் அல் சவுத் மற்றும் முடிக்குரிய இளவரசரும் பிரதமருமான இளவரசர் முகமது பின் சல்மான் பின் அப்துல்அஸிஸ் அல் சவுத் ஆகியோருக்கு அவர் தனது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்தார்.

யாத்ரீகர்கள் தமது மதக் கடமையை சுமுகமாகவும், பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நிறைவேற்றுவதற்கு உதவுவதற்கு ரியாத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் மற்றும் ஜித்தாவில் உள்ள இலங்கைத் துணைத் தூதரகம் ஆகியவை எப்பொழுதும் தயாராகவுள்ளதாகவும் இலங்கை யாத்ரீகர்களுக்கு தூதுவர் உறுதியளித்தார்.

2026 ஆம் ஆண்டு ஹஜ் பருவத்திற்காக, 3,500 இலங்கை யாத்ரீகர்களுக்கு வசதி செய்வதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்தப் புனிதப் பயணம் வெற்றிகரமாக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக, இலங்கை ஹஜ் குழு, சவுதி அரேபியாவின் ஹஜ் மற்றும் உம்ரா அமைச்சு, சவுதியால் நியமிக்கப்பட்ட சேவை வழங்குநர் மற்றும் உள்ளூர் பயண முகவர்கள் ஆகியோருக்கிடையிலான நெருக்கமான ஒருங்கிணைப்புடன் இது முன்னெடுக்கப்படுகின்றது.


No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.