பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகம் தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்வதற்கு பொதுநிர்வாக அமைச்சின் முன்னாள் மேலதிக செயலாளர் லியனகே தலைமையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் குழு நியமிக்கப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சித் தலைவர் இணக்கம் தெரிவித்தார். ஆனால் தற்போது குழு நியமனம் தவறு என்று குறிப்பிடுகிறார். அவ்வாறாயின் கடந்த ஐந்து மாதங்களாக எதிர்க்கட்சித் தலைவர் ஏன் இவ்விடயத்தில் வாய் மூடிக் கொண்டிருக்க வேண்டும். பாராளுமன்றத்திலும், பொது இடத்திலும் இவ்விடயம் பற்றி ஏன் பேசவில்லை என ஆளுங்கட்சியின் பிரதம கொறடாவான நளிந்த ஜயதிஸ்ஸ கேள்வியெழுப்பினார்.
பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (03) நடைபெற்ற அமர்வின் போது பாராளுமன்ற பிரதி செயலாளர் நாயகமாக பதவி வகித்த சமிந்த குலரத்ன பதவி நீக்கப்பட்டமைக்கு எதிர்க்கட்சியின் உறுப்பினர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தினார்கள்.இதன்போது ஒழுங்குப்பிரச்சினையை முன்வைத்து உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அங்கு அவர் மேலும் உரையாற்றியதாவது,
பாராளுமன்றத்தின் சுயாதீனத்தை பாதுகாக்கும் பொறுப்பு சபாநாயகருக்கு மாத்திரமல்ல, பாராளுமன்ற பணிக்குழாமினருக்கும் உண்டு. ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார முன்னாள் சபாநாயகர்களின் குணங்களை குறிப்பிட்டு உரையாற்றினார். முன்னாள் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவரதனவையும் புகழ்ந்தார்.
பாராளுமன்ற விதிவிதானங்களுக்கு அமைவாகவே பாராளுமன்ற பணிக்குழாம் தொடர்பான குழு செயற்படுகிறது. அக்குழுவில் ஆளுங்கட்சி மாத்திரமல்ல, எதிர்க்கட்சித் தலைவரும் உறுப்பினராக உள்ளார்.

Post a Comment