பாறுக் ஷிஹான்

அம்பாறை மாவட்ட  அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் பிரதிநிதிகளுடனான கலந்துரையாடல் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தேசிய அமைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான அஷ்ரப் தாஹிர்   ஏற்பாட்டில்சனிக்கிழமை  (03) நிந்தவூர் தனியார் விருந்தினர் மண்டபத்தில்  நடைபெற்றது.

கட்சியின் தேசிய தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான றிஷாட் பதியுதீன் Zoom தொழில்நுட்பத்தின் ஊடாக இக்கலந்துரையாடலில் இணைந்து, கலந்து கொண்டிருந்த மக்கள் பிரதிநிதிகளுடன் நேரடியாக கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார்.

அவர் தனது உரையில், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் கல்வி மற்றும் கலாசாரப் பிரிவினால் எதிர்காலத்தில் நடைமுறைப்படுத்தப்படவுள்ள திட்டங்கள் குறித்து தெளிவுபடுத்தியதுடன் ஓர் அரசியல் கட்சியின் சமூகப் பொறுப்பின் முக்கிய அங்கமாக கல்வி மேம்பாட்டு செயற்பாடுகள் அமைய வேண்டுமென வலியுறுத்தினார். 

அந்த வகையில், சமூகத்தின் கல்வி முன்னேற்றத்துக்கு அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தொடர்ச்சியான முக்கியத்துவம் வழங்கி வருவதாகவும்   தெரிவித்தார்.

மக்கள் பிரதிநிதிகளின் செயற்பாடுகளை ஒருங்கிணைத்து, மாவட்ட மக்களின் தேவைகளுக்கு சிறந்த தீர்வுகளை முன்வைக்கும் நோக்கில் அமைந்த இக் கலந்துரையாடல் பயனுள்ளதாக அமைந்ததாகக் கலந்து கொண்டவர்கள் தெரிவித்தனர்.

இக் கலந்துரையாடலில் அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் அம்பாரறை மாவட்ட அமைப்பு, எதிர்கால அரசியல் மற்றும் சமூக செயற்பாடுகள், மேலும் பிரதேச மட்டத்தில் மக்கள் பிரதிநிதிகள் எதிர்கொள்ளும் சவால்கள் குறித்து விரிவாக ஆராயப்பட்டன. மாவட்டத்தின் அரசியல் செயற்பாடுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிமுறைகள் குறித்தும் கருத்துப் பரிமாற்றங்கள் இடம்பெற்றமை குறிப்பிடத்தக்கது.