சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றைத் தவறாகப் பயன்படுத்தி அரசாங்கத்திற்கு நிதி இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் சம்பவம் தொடர்பில், முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் புதல்வர் ஜோஹான் பெர்னாண்டோ பொலிஸ் நிதிச் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார். 

ஜோன்ஸ்டன் பெர்னாண்டோ கூட்டுறவு மற்றும் உள்நாட்டு வர்த்தக அமைச்சராகப் பணியாற்றிய காலத்தில், சதொச நிறுவனத்திற்குச் சொந்தமான லொறி ஒன்றை அவருக்குச் சொந்தமானதாகக் கூறப்படும் எதனோல் நிறுவனத்தின் பணிகளுக்காகப் பயன்படுத்தியதாக முறைப்பாடு அளிக்கப்பட்டது. இதன் மூலம் அரசாங்கத்திற்கு சுமார் 2.5 இலட்சம் ரூபாய் (250,000) நிதி இழப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது. 

சட்டமா அதிபரின் அறிவுறுத்தலுக்கு அமைய, ஜோஹான் பெர்னாண்டோ குருநாகலில் வைத்து இன்று கைது செய்யப்பட்டார். 

இவருக்கு எதிராக பணச் சலவை தடுப்புச் சட்டம், பொதுச் சொத்துச் சட்டம், அரசாங்கச் சொத்துக்களை முறைகேடாகப் பயன்படுத்தல் மற்றும் குற்றவியல் மோசடி ஆகிய குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.  கைது செய்யப்பட்ட சந்தேகநபர் நாளை (31) நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளார்.  இதே குற்றச்சாட்டுகளின் கீழ் முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவையும் கைது செய்ய விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. 

எனினும், அவர் தற்போது இருக்கும் இடத்தை பொலிஸாரால் கண்டறிய முடியவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது. 

அவரைத் தேடிக் கைது செய்வதற்காக 5 விசேட பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக உயர் பொலிஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.