கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி இன்று உயிரிழந்த கொழும்பு 15, மோதரையைச் சேர்ந்த பாத்திமா றினோஸாவின் ஜனாஸாவைப் பார்வையிட மற்றும் ஜனாஸா தொழுகையில் பங்கேற்க அவரது கணவருக்கு அனுமதியளிக்கப்படவில்லை என உயிரிழந்தவரின் மகன் சப்ரின் தெரிவித்தார்.
இது குறித்து அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
“கொரோனா வைரஸ் காரணமாக கொழும்பு தேசிய தொற்று நோயியல் வைத்தியசாலையில் வபாத்தான எனது உம்மாவை எரியூட்டுவதற்காக என்னிடம் கையொப்பம் கேட்டார்கள். நான் மறுத்தேன்.
அதில் பிடிவாதமாக இருந்தேன். எனினும், அவர்கள் பலாத்காரமாக என்னிடம் கையொப்பத்தைப் பெற்றார்கள். எனது உம்மாவுக்கு ஜனாஸா தொழுகை நடத்தினோம்.
எனினும், எனது உம்மாவின் ஜனாஸாவைப் பார்வையிடவோ அல்லது அவருக்காகத் தொழுகை நடத்தவோ எனது வாப்பாவை அனுமதிக்கவில்லை. பலாத்காரமாக எங்கள் குடும்பத்தை அநுராதபுரத்திற்கு ஏற்றி அனுப்பி விட்டார்கள்.
இது பெரும் அநீதியானது. நாங்கள் கவலையடைந்துள்ளோம். ஏமாற்றமடைந்துள்ளோம். மனைவியின் முகத்தை கணவருக்குக் காட்டாமையும், ஜனாஸா தொழுகையில் கணவரை அனுமதிக்காமையும் நியாயமா?
இந்தப் புனித ரமழான் காலத்தில் உங்கள் பிரார்த்தனையில் எங்கள் உம்மாவையும் இணைத்துக்கொள்ளுங்கள்" - என்றார்.

Post a Comment

Previous Post Next Post

Find Us On Facebook