Page Nav

தலைப்புச் செய்திகள்

latest


மதுவரித் திணைக்களத்தின் தீர்மானத்திற்கு நிறுவனங்கள் எதிர்ப்பு


மதுபான உற்பத்தி மற்றும் சேமிப்பின் போது ஏற்படும் மதுசார வீணடிப்புச் சதவீதத்தை 1.5% இல் இருந்து 0.1% ஆகக் குறைப்பதற்குப் மதுவரித் திணைக்களம் எடுத்துள்ள தீர்மானத்திற்கு நாட்டின் மதுபான உற்பத்தியாளர்கள் தமது கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.

மதுவரித் திணைக்களத்தின் இந்த புதிய அறிவிப்பினால், தற்போது இலங்கை அரசாங்கத்திற்கு 23 பில்லியன் ரூபாயை மிகப்பெரிய வரிப் பணமாகச் செலுத்தி வரும் நாட்டின் முன்னனி நிறுவனங்கள் மீண்டும் ஒருமுறை வரி செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என உற்பத்தியாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதன் காரணமாகத் தமது உற்பத்தி நடவடிக்கைகளை மேலும் முன்னெடுத்துச் செல்வது கடினமாகி உள்ளதாக அந்நிறுவனங்கள், மதுவரித் திணைக்களத்திற்கு எழுத்து மூலம் அறிவித்துள்ளன.

மதுபான உற்பத்தியின் போதும் சேமிப்புச் செயற்பாடுகளின் போதும் மதுசாரம் ஆவியாதல் சம்பவங்கள் அதிகளவில் பதிவாவதாக உற்பத்தியாளர்கள் குறிப்பிடுகின்றனர்.

குறிப்பாக, போத்தல்களில் அடைக்கும் இயந்திரங்களுக்குச் மதுசாரத்தைச் செலுத்தும் போதும், நவீன இயந்திரங்கள் மூலம் போத்தல்களில் அடைக்கும் செயற்பாடுகளின் போதும் இவ்வாறு அதிகளவில் மதுசாரம் ஆவியாகின்றது.

இது தவிர, அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வாளரிடம் மதுபானப் போத்தல்களைச் சமர்ப்பிக்கும் போது, மதுவரித் திணைக்கள அதிகாரிகளால் பொறுப்பேற்கப்படும் மதுபானப் போத்தல் தொகுதிகளும் இந்த வீணடிப்புச் சதவீதத்தின் கீழேயே கணக்கிடப்படுகின்றன என்பதும் குறிப்பிடத்தக்கது.

மதுவரித் திணைக்களத்தினால் இலக்கம் 991 உடைய மதுவரி அறிவித்தல் மூலம் கடந்த ஜூலை மாதம் 24ஆம் திகதி இந்த புதிய திருத்தப்பட்ட அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளதுடன், இது தென்னை மற்றும் பனை சாராய உற்பத்திகளின் போது ஏற்படும் வீணடிப்புகளை மட்டுமே கருத்தில் கொண்டு தயாரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு முன்னர் மதுவரித் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டிருந்த இலக்கம் 151 உடைய அறிவித்தலில் குறிப்பிடப்பட்டிருந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தை, திருத்தப்பட்ட 991ஆம் இலக்க அறிவித்தல் மூலம் இவ்வாறு குறைத்தது ஒரு தன்னிச்சையான செயலாகும் என மதுபான உற்பத்தியாளர்கள் வலியுறுத்துகின்றனர்.

எனவே, இந்த மதுசார வீணடிப்புச் சதவீதத்தைக் குறைப்பதற்கு முன்னர், இந்த வீணடிப்புகள் எவ்வாறு நிகழ்கின்றன, எதன் அடிப்படையில் நிகழ்கின்றன மற்றும் அதற்குப் பங்களிக்கும் அறிவியல் காரணிகள் யாவை என்பது குறித்து சரியான, நடைமுறைச் சாத்தியமான மற்றும் அறிவியல் பூர்வமான பரிசோதனையை மேற்கொள்வது அத்தியாவசியமானது என உற்பத்தியாளர்கள் மேலும் தெரிவித்துள்ளனர்.

No comments

வாசகர்களுக்கு ஓர் அன்பான வேண்டுகோள் :

1. செய்திகள் குறித்த கருத்துக்களைப் பதிவு செய்யும்போது, எவருடைய மனதையும் புண்படுத்தாத வகையில், நாகரிகமான முறையில் உங்கள் கருத்துகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்க்கிறோம்.

2. ஏற்கனவே பதிவு செய்யப்பட்ட கருத்துகளையும் விமர்சிக்கலாம். ஆனால் தனிப்பட்ட முறையில் எவரையும் விமர்சிக்காமல், கருத்துக்கள் மற்றும் செய்திகளை மட்டுமே விமர்சிக்க வேண்டுகிறோம்.

3.உங்களது மேலான கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எதிர்பார்கிறோம்

இந்த வலைதளம் வளாச்சிக்கு நிறை - குறைகளை
சுட்டி காட்டவும் உங்கள் வருகைக்கு நன்றி.